இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி 08 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.
லண்டனில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம்’ என்ற முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
லண்டனில் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,
“சீனாவை எங்கள் எதிரியாக நாங்கள் கருதவில்லை, ஒருவேளை சீனா அவ்வாறு கருதுகிறது. நாங்கள் யாரையும் எதிரியாக கருதவில்லை… 2020ல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நமது பாதுகாப்புப் படைகள் காட்டிய துணிச்சல், இந்தியாவைப் பற்றிய சீனாவின் கண்ணோட்டம் மாறுவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம், இந்தியா பலவீனமாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். முன்பு பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்தோம், ஆனால் இப்போது பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதல் 25 நாடுகளில் இந்தியா உள்ளது என்றார்.
பிரிட்டனுடன் வளமான கூட்டுறவை இந்தியா விரும்புகிறது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நல்லுறவு உள்ளது என்றார். இரு நாடுகளும் இணைந்து பெரிய காரியங்களைச் செய்ய முடியும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகக் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்றார். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதன் போது, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான மூலோபாய கூட்டுறவை லியுறுத்தினார்.
ராஜ்நாத் சிங் தனது பிரிட்டன் பயணத்தின் போது, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் உட்பட பல தலைவர்களை சந்தித்தார்.
பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய சமூகத்தினருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துரையாடினார்.