நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்து.
அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசனர். இதனால், அவையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர், இருவரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கூச்சலிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இது ஒருபுறம் இருக்க, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் பாலிகிராஃப் சோதனைக்கு ஜனவரி 5-ம் தேதி ஒப்புதல் அளித்தனர். நீலம் ஆசாத் மட்டும் மறுத்து விட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோர் நார்கோ பகுப்பாய்வு மற்றும் மூளை மேப்பிங் சோதனைக்கும் ஒப்புதல் அளித்தனர்.
ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் பாலிகிராஃப் தேவை என்றும், கூடுதலாக மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங் தேவை என்றும் தெரிவித்தார்.
அதோடு, சட்ட உதவி ஆலோசகர் அமித் சுக்லா, குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் இருவரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங்குக்கான காரணத்தைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.