எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.
கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைக்கும் 5 முதல் 18 வயது வரையுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு விருது வழங்கினார். இவர்கள், 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த விருது வழங்கும் விழா இளம் சாதனையாளர்களின் அற்புதமான திறன்களையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளுக்கு பல்துறை திறமைகள் இருக்கின்றன. மேலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது.
குழந்தைகளின் திறமையையும், ஆற்றலையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது நமது கடமை. இன்று இந்தியாவிடம் பெருமளவிலான இளைஞர்கள் என்ற வகையில் விலைமதிப்பற்ற வளம் இருக்கிறது. இந்த வளமானது இந்தியா மட்டுமன்றி முழு உலகத்தின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.
இளம் தலைமுறையினரிடம் உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. குறைவான உடல் செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக இருந்த பல நோய்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டையாவது கற்று, அதில் பங்கேற்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டு அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்றார்.
இந்நிகழ்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இத்துறையின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதேபோல, விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.