ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சுரங்கத்துறை அமைச்சர் பதவியையும் இவரே தன் வசம் வைத்திருக்கிறார். அந்த வகையில், தனது உதவியாளருக்கு முறைகேடாக ஹேமந்த் சோரன் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரன் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறையுமே ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
இதையடுத்து, 8-வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது, தன்னால் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்து பதிலளிக்க முடியாது. அதேசமயம், எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால், ஒத்துழைப்புத் தருகிறேன் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. எனினும், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர், அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தற்போது ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சம்மனில், வரும் 27 முதல் 31-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கேள்விளுக்கு பதிலளிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.