ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத இரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும், முன்பதிவு இல்லாத இரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி இன்று ஈரோட்டில் இருந்து புறப்படும் இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இதன் முதல் சேவையை ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த இரயில் நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு – செங்கோட்டை முன்பதிவு இல்லாத இரயில் (வண்டி எண் – 16845), தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கோட்டை – ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத இரயில் (வண்டி எண் – 16846), செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 03.00 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.
இந்த இரயில்கள் நெல்லை – செங்கோட்டை பிரிவில், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.