2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை விராட் கோலி வென்றதன் மூலம் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1337 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டும் 765 ரன்கள் அடித்து ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.
அத்துடன் அதே தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையும் விராட் கோலி படைத்தார். இதனால் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் இப்போது இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்றில் 4 முறை ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை வெல்லும் முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இது போக சிறந்த டெஸ்ட் வீரர், சகாப்தத்தின் சிறந்த வீரர் உட்பட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 10 ஐசிசி விருதுகளை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக உலகிலேயே 10 ஐசிசி விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற யாராலும் தொட முடியாத உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.