75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, தீயணைப்பு துறை, பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், தமிழக கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முப்படைகளின் கவச வாகனங்கள், அரசுத் துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.