ரயில்வே துறையில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
ரயில்வே துறையில் வேலை வழங்க,லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தின. இந்நிலையில் சிபிஐ லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி, மகனுக்கு எதிராக ஜூலை 3-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ரயில்வேயின் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், நடைமுறைகளுக்கு எதிராக மத்திய ரயில்வேயில் சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சில நாட்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.