டெல்லி வஜிராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.
டெல்லி வஜிராபாத் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அருகருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், தீ மளமளவென மற்ற வாகனங்களுக்கும் பரவியது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி அதிகாலை 4.15 மணிக்கு தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் சிக்கி, 200-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும், 250-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் என 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீவிபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.