பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அவரது இல்லத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜக பிப்ரவரி 4 முதல் 11 வரை ‘காவ் சலோ அபியான் இயக்கத்தை நடத்தவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக தொண்டர்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுமார் 7 லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து சாவடிகளிலும் 24 மணிநேரமும் அவர்கள் செலவழிக்க பணிக்கப்படுவார்கள்.
பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொண்டர்களை’பிரவாசி காரியகர்த்தா’ என, கட்சி மேலிடம் அழைக்கிறது. மத்தியிலும் மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உதவும் பணி இந்த காரியகர்த்தாக்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பாஜகவுக்கு மக்களுடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.