ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் வழிபாடு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தொல்லியல் துறை ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியே நான்கு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில், ஒரு அறையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜாரியாக இருந்த சோம்நாத் வியாஸ், 1993 வரை பூஜைகள் செய்து வந்தார். கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், இந்த அறையை மூட, அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.
சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், அந்த அறையில் தொடர்ந்து பூஜைகள் செய்ய அனுமதி கேட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பல தசாப்தங்களுக்கு பிறகு, ஹிந்துக்கள் முதல்முறையாக நேற்று அங்கு வழிபாடு நடத்தினர்.
இதனை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் வாரணாசி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் வழக்கு 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.