ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம் அமலாக்கதுறையினரால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்சா சட்டமன்ற கட்சித் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் சி.பி, ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிப்ரவரி 2ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.சம்பாய் சோரன் அரசுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் ஓட்டெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வாக்கெடுப்பில் பங்கேற்றார். அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என எம்.எல்.ஏ.,க்களுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார்.