உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மி.மீ. கொண்ட பீரங்கி குண்டுகளை மேம்படுத்த, பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்பட உள்ளது.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மிமீ துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்த பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் செயல்பட உள்ளது. இந்த முயற்சி பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இலக்கை எட்ட உதவிகரமாக இருக்கும்.
155 மிமீ கொண்ட பீரங்கி குண்டுகளின் துல்லியத்தை அதிகரித்து, பிழை ஏற்படும் சுற்றளவை 10 மீட்டர் தூரத்திற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். தற்போது, இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ள பீரங்கி குண்டுகளின் பிழை ஏற்படும் சுற்றளவு 500 மீட்டராக உள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தும் மையப்புள்ளியில், சேதத்தை அதிகரிப்பதும் இதன் மற்றொரு முக்கிய இலக்காகும்.
சென்னை ஐஐடியைச் சேர்ந்த வான்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியர் ஜி.ராஜேஷ் தமது குழுவினருடன், இரண்டாண்டு காலத்தில் துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட உள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ரவி காந்த் கூறியிருப்பதாவது, “நாடு ‘தற்சார்பு’ இலக்கை அடைவதில் இந்த முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உயர்தர வெடிமருந்து தயாரிப்பில் எம்ஐஎல் நிறுவனத்தின் பலமும், வழிகாட்டும் அமைப்பை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி-யின் திறமையும் இணைந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பீரங்கி குண்டுகளை மேம்படுத்த எம்ஐஎல் ஈடுபடுவதற்கு வழிவகுப்பது உறுதி” என்று தெரிவித்தார்.