கோவாவில் நடைபெறும் இந்தியா எரிசக்தி வாரம் 2024-ல் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
எரிசக்தி உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள், எண்ணெய், எரிவாயு சந்தையில் முக்கிய முடிவெடுப்பவர்கள் என அனைவரும் இந்தியா எரிசக்தி வாரம், 2024-ல் பங்கேற்க உள்ளனர்.
லிபியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் பெட்ரோலியத் துறை அமைச்சர்களும், கானா, ஜிபூட்டி, இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றும் முக்கிய வெளிநாட்டு அரசுப் பிரதிநிதிகளாவர்.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதன் அல் கைஸ் பங்கேற்க உள்ளார். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா எரிசக்தி வாரம், 2024-ல் முக்கிய அமர்வுகளில் தலைமை தாங்கவுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிபொருள் அமைப்புகள், நிறுவனங்கள், கொள்கை ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வில் 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், 350-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 400-க்கும் அதிகமான பேச்சாளர்கள், 4 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்தை ஒரே நேரத்தில் உறுதி செய்வதில், உள்ள சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதியைக் குறைப்பதற்கும், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை விரைவாக அதிகரிப்பது மற்றும் அனல் மின்சக்தியை விட குறைந்த செலவில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை நிலைநிறுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் நாடு இந்தக் கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளது.