இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 475 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய சுற்றுலாத்தள பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து உள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சாலைகளில் பனி படர்ந்து காணப்படுவதால், சாலைகளில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சம்பாவில் 56 சாலைகளும், காங்ராவில் 1 சாலையும், கின்னூரில் 6 சாலைகளும், மண்டியில் 51 சாலைகளும், சிம்லாவில் 133 சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, 4 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 504 சாலைகள் பனியால் மூடப்பட்டிருந்தன. மேலும், மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக, கிட்டத்தட்ட 6 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட, ஹிமாச்சலப் பிரதேசத்தின் 566 சாலைகள் பனியால் மூடப்பட்டன.