இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே மாலத்தீவு அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாலத்தீவு அதிபரின் பார்வை சீனாவின் மீது திரும்பியது.சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தினார். மேலும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் ஆடம்பர ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்றது. பாரம்பரியமாக இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக இந்தியாவில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனையடுத்து லட்சத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஎன்எஸ் ஜடாயுவின் வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை அதிகரிப்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அவர்கள் தற்போது மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை கருதுகின்றனர்.
லட்சத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே லட்சதீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைக்கிறார்.