டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமனறம், அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆஜரானார். அப்போது, சட்டசபையில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்த மாதம் 16ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.