கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில், இணைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், சோதனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி மனுவுக்குப் பதிலளிக்க அமலாக்கத்துறைக்குச் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்ய அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது