மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, வரும் 24 -ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் & பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப். 21 முதல் 24 வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சதுரகிரி கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குச் கடுமையான கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். அதன்படி 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி இல்லை என்றும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும், மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது என்றும், இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்படப் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.
இதனிடையே, கனமழை பெய்தால் மலை ஏற அனுமதி நிறுத்தப்படும் எனத் தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.