மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த சென்ற போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகான் வரும் 29ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், திடீரென இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.