சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கரோனல் மாஸ் எஜெக்ஷனை கண்டறிந்து, அதை ஆய்வு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.
அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.
ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி எல்-1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, விண்கலத்தில் பாபா(PAPA) எனும் கருவி இணைக்கப்பட்டிருந்தது.
இதன் வேலை, சூரியனிலிருந்து வெளிவரும் அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பை(கரோனல் மாஸ் எஜெக்ஷன்) கண்காணித்து அதை ஆய்வு செய்வதுதான். அந்த வகையில் தனது பணியை பாபா கருவி சிறப்பாக செய்திருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சூரியனிலிருந்து அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை இக்கருவி சரியாக கண்டுபிடித்திருக்கிறது. பாபா ஒரே கருவியாக இருந்தாலும், இதில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன.
இந்த சென்சார்கள் சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.
Aditya-L1 Mission:
PAPA payload has been operational and performing nominally.It detected the solar wind impact of Coronal Mass Ejections (CMEs) including those that occurred during Feb 10-11, 2024.
Demonstrates its effectiveness in
monitoring space weather conditions.… pic.twitter.com/DiBtW4tQjl— ISRO (@isro) February 23, 2024
இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக அந்த சாதனங்கள் செயலிழக்க கூடும்.
எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது என்று இஸ்ரோ தற்போது உறுதி செய்துள்ளது.