ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு உள்ளிட்ட 18- க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டாக இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹவுதி தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், செங்கடலில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இருந்தபோதிலும், ஹவுதி தீவிரவாதிகள் அதைக் கண்டு கொள்ளாமல், செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.
இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.
இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளன. ஹவுதி தீவிரவாதிகளின் ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதானல், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.