தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் மரைஸ் எராஸ்மஸ், தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இவர் 3 முறை ஐ.சி.சி.,யின் சிறந்த நடுவர் விருதை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூத்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
முன்னாள் தென்னாப்பிரிக்க உள்நாட்டு கிரிக்கெட் வீரராக இருந்த எராஸ்மஸ் 2006 முதல் சர்வதேச விளையாட்டுகளில் நடுவராக இருந்து வருகிறார்.
இவர் 80 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். அவர் 18 மகளிர் டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டு இருக்கிறார். மேலும், 131 சர்வதேச போட்டிகளில் டிவி நடுவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சலுகைகளையும் பயணத்தையும் இழக்கிறேன். ஆனால் இதுவரை எனது வசதியான வாழ்க்கையை விட்டு விலகி வாழ்ந்தது போதுமானது.
இனி மிகவும் சலிப்பான வாழ்க்கையை நான் தேடுகிறேன். கடந்த ஆண்டு அக்டோபரில் இது குறித்து நான் முடிவெடுத்தேன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என்று ஐசிசிக்கு தெரிவித்தேன்” எனக் கூறினார்.
சர்வதேச நடுவராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது திட்டங்களைப் பற்றி கேட்டதற்கு, எராஸ்மஸ், “முதல் இரண்டு மாதங்களுக்கு நான் குளிர்காலத்தை அனுபவிக்கப் போகிறேன். நாங்கள் உள்நாட்டில் சில பயணங்களைத் திட்டமிட்டுள்ளோம், செப்டம்பர் முதல் நான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.