காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய அவர், காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சியின் மிகப் பெரிய எதிரிகள். வட கரன்புரா மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அடுத்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தேன். இன்று, இந்த மின் உற்பத்தி நிலையத்தால் பல வீடுகள் ஒளிர்கின்றன என பிரதமர் தெரிவித்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சிறந்த சட்டம் ஒழுங்கு மற்றும் நேர்மையான அரசு முக்கியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹு மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான சமீபத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நிலக்கரி குவியல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக பணம் குவியலை பார்த்தோம் என தெரிவித்தார்.
மேலும், ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸும் ஆதிவாசிகளை தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுவதாக பிரதமர் மோடி கூறினார். ஆதிவாசிகளை அவர்கள் ஒருபோதும் முன்னேற விடமாட்டார்கள். இந்த வம்சங்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். நீங்கள் எனது குடும்பம், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எனது உத்தரவாதம்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.