இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலாத் தலங்களும் அடங்கிய இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.
பெரும்பாலான சுற்றுலாத் தல பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், மரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
உதய்பூரில் சுமார் இரண்டு அடி உயரத்திலும், உயர்ந்த சிகரங்களில் நான்கு அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக மணாலி, கிலாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்கில் பனிச்சரிந்து விழும் அபாயம் உள்ளதால், மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.