நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் எனவும், இது குறித்த விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
1998-ல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 1998ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் தற்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது, 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொதுவாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். எனவே, 1998ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல. நாடாளுமன்ற சலுகையை பயன்படுத்தி எம்.பி லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது. எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கினாலும் குற்றமே. லஞ்சம் வாங்குவது என்பது எம்.பி, எம்எல்ஏக்களின் தனிப்பட்ட குற்றம். மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்” இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.