லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிவந்தனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீகாா் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பாஜக ஓபிசி பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வந்தனர். தற்போது, மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சி அமைத்துள்ளது.
அனைத்து நில மாபியா கும்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். பீகாா் மாநிலத்தில் ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, மாநில அரசால் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். இக்குழு பரிந்துரைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர்கள், தங்களின் குடும்ப நலனுக்காகவே பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் ஏழைகளுக்கு என்று என்ன செய்தார்கள்?. ஏழைகளுக்கு யாராவது நல்லது செய்ய முடியும் என்றால், அது பிரதமர் மோடியும், பாஜக-வும் மட்டும் தான் என்று கூறினார்.