இந்தியா – இங்கிலாந்து காய்களுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் தன் உடல்நலம் குன்றிய தாயாரை காண ரோகித், ராகுல் டிராவிட், புஜாரா, ஜெய் ஷா ஆகியோர் தனக்கு செய்த உதவியை குறித்து பகிர்ந்துகொண்டார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. அந்த போட்டியின் போது அஸ்வின் ஒரு நாள் முழுவதும் போட்டியில் பங்கேற்கவில்லை.
அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது மனைவியால் தெரிவிக்கப்பட்டது. அதனால், மனம் உடைந்த அஸ்வின், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த சிறிது நேரத்திலேயே அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆகையால் போட்டியில் இருந்து விலகி தன் தாயை காண உடனே புறப்பட்டு சென்னை வந்தார். இந்நிலையில் அந்த சம்பவத்தை குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் அஸ்வின்.
அஸ்வின் தனது அணியினர், குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தனது தாயுடன் சென்னைக்கு வர உதவியதாக கூறியுள்ளார். மேலும், புஜாரா செய்த உதவியையும் அவர் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் போட்டி முடிந்ததும் அவரது தாயார் கடுமையான தலைவலியால் மயங்கி விழுந்ததால் அஸ்வின் அணியை விட்டு வெளியேறினார்.
அவர் மூன்றாவது நாளில் அணியுடன் இல்லை, ஆனால் நான்காவது நாளில் மீண்டும் இணைந்தார். புஜாராவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாடகை விமானத்தில் சென்னைக்குச் சென்றார் அஸ்வின்.
மேலும் ஜெய் ஷா ஏற்பாடு செய்த ஒரு வாடகை விமானத்தில் மீண்டும் போட்டி நடந்த ராஜ்கோட்டுக்குத் திரும்பினார்.
இது குறித்து அஸ்வின் தனது யூட்யூப் வீடியோவில் பேசியுள்ளார். அதில் “500 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு எனது பெற்றோர் மற்றும் மனைவியிடமிருந்து அழைப்பு அல்லது செய்திக்காக காத்திருந்தேன். இரவு 7 மணி ஆகியிருந்தது.
யாரும் என்னை அழைக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் அல்லது வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தேன்.
எனது அழைப்புகளுக்கு எனது பெற்றோர் பதிலளிக்காததால் நான் இரவு 7 மணியளவில் எனது மனைவியை அழைத்தேன். அவர் வருத்தத்துடன் என் அம்மாவின் நிலையை என்னிடம் சொன்னார்.
சென்னைக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். நான் அழ ஆரம்பித்தேன். என் அறையில் தனியாக அமர்ந்தேன். யாருடனும் பேசும் மனநிலையில் அப்போது இல்லை.
எனது தொலைபேசி எண்ணை அணுக முடியவில்லை, என்பதால் மனைவி என்னைச் சரிபார்க்கும்படி அணியின் பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் கூறினார். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.
நான் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கும் ஒரு வீரர் என்பதால் நான் வீட்டிற்குச் சென்றால் 10 வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். தொடரும் 1-1 என இருந்தது.
பின்னர் நான் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தேன், என் அம்மாவின் உடல்நிலை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் பேசினேன். அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று சொன்னார்கள். ரோஹித் மற்றும் டிராவிட் என்னைச் சந்திக்க வந்தனர்.
என் பைகளை எடுத்துக் கொண்டு சென்னை செல்லும்படி சொன்னார்கள். என் அம்மாவுடன் இருப்பது முக்கியம் என்று ரோஹித் கூறினார். ரோஹித் வாடகை விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார்.
எனக்காக ஒரு வாடகை விமானத்தை முன்பதிவு செய்த புஜாராவுக்கு மிக்க நன்றி, அந்த விமானத்தில் நான் 2 மணி நேரம் செலவிட்டேன். எங்கள் டீம் பிசியோ கமலேஷ் எனது நல்ல நண்பர், ரோஹித் அவரை என்னுடன் பயணம் செய்யுமாறு சொன்னார்.
இருப்பினும், அணியில் இரண்டு பிசியோக்கள் மட்டுமே இருந்ததால் நான் மறுத்துவிட்டேன், என்னுடன் ஒருவர் சென்றால், ஒருவர் மட்டுமே அணியுடன் இருப்பார். அதனால் நான் மறுத்தேன். இருப்பினும், நான் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்காக வெளியே சென்றபோது,கமலேஷ் தனது பையுடன் வெளியே நிற்பதைக் கண்டேன்.
பயணம் முழுவதும் என்னைப் பற்றி அறிய ரோஹித் கமலேஷை அழைத்தார். ரோஹித்தின் செயலை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் கமலேஷுக்கு தொடர்ந்து போன் செய்து எனது நலம் குறித்து தெரிந்து கொண்டார்.
ரோஹித் கேப்டனாக ஏதாவது பெரிய சாதனையை படைக்க இறைவனை பிரார்த்திப்பேன்” என்று கூறினார் அஸ்வின். இந்த காணொளியை கண்ட ரசிகர்களும் ரோகித் நல்ல கேப்டன், மனிதநேயமிக்க மனிதர் என்று பார்ட்டி வருகின்றனர்.