ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டது. 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல்களை ஆதரித்தன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா முழுவதும் குடிமக்களிடம் இருந்து 21,558 பதில்கள் பெறப்பட்டன. அவர்களில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை ஆதரித்தனர்.
நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் 12 முக்கிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற சட்ட வல்லுநர்கள் குழுவால் அழைக்கப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து தமது அறிக்கையை சமர்ப்பித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என தெரிவித்துள்ளார். இந்த குழுவில் அவரும் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.