ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள் கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே உள்பட 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர்.
முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள், சாதனைகள், சவால்கள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.
அப்போது, பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 நாட்கள் அறிமுகப் பயிற்சி முகாமும், அடுத்த 7 நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாமும் நடைபெறும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்குப் பதிலாக, 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்கு பதிலாகப் பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் நடைபெறும். அவை 20 நாட்கள் மற்றும் 25 நாட்கள் என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும், அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நுாற்றாண்டு விழா நடைபெற உள்ளதாலும், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.