நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல் காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி துபாயில் நடைபெற் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை முழுமையாக வெளியிடாமல் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறுவதால் அந்த தேதியை வைத்தே ஐபிஎல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
அதே போல இந்த முறையும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால், எந்தெந்த தேதிகளில் எல்லாம் வாக்கெடுப்பு நடக்குமோ, அந்த தேதிகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம்.
தற்போது பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வார தேதிகளை மட்டுமே அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 7 க்கு பிறகான ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
அந்த சமயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதால் ஏப்ரல் 7 முதல் மே மாதம் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கு 2024 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
இதனால் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். ஏனெனில் வெளிநாடுகளுக்கு சென்று ஐபிஎல் போட்டியை காண முடியாது. அதேபோல் 2019 ஐபிஎல் தொடர் நாடாளுமன்ற தேர்தலுக்கு நடுவே எந்த பிரச்சினையும் இன்றி நடந்தது போல இந்த முறையும் நடக்க வேண்டும் என்பதே ஐபிஎல் அணிகளின் எண்ணமாக உள்ளது.