சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி’ என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது.
பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேடியாகச் சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய மோடி சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் இனி ‘சிவசக்தி என்று அழைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதி ‛ தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனறும் அவர் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சூட்டிய ‛ சிவசக்தி ‘ பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ‛சிவசக்தி’ என்ற பெயருக்கு, சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.