அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இன்று இரண்டாவது முறையாக உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார்.அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவுகள் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு எப்படி சென்றது என்பது குறித்து புகார் பதிவு செய்து விசாரண நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது அட்டவணையின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட ரகசிய காப்புப் பிரமாணத்தை அவர் மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தட்டச்சர், கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்டவை வழங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.