ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது : பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவோம். இந்த ஜனநாயகம் மூன்று குடும்பங்களுக்குள் மட்டும் நின்றுவிடாது, மக்கள் ஜனநாயகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் வம்ச அரசியலின் செல்வாக்கிலிருந்து காஷ்மீரை விடுவிப்பதே பாஜகவின் நோக்கம். காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் பிடிபி ஆகிய மூன்று வம்சக் கட்சிகள் அடிமட்ட அளவில் ஜனநாயகம் பரவுவதற்குத் தொடர்ந்து தடையாக இருக்கிறது. இந்த முறை அந்த 3 கட்சிகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமித் ஷா கூறினார்.
முதன்முறையாக ஜம்மு காஷ்மீரின் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு மோடி அரசு அளித்துள்ளது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பிரிவு 370-ன் நிழலின் கீழ், ஒரு பிரிவினைவாத சித்தாந்தம் வேரூன்றி, ஜம்மு- காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இட்டுச் சென்றது. இந்தச் சூழலை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. கடந்த நான்கு தசாப்தங்களில் 40,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இன்று ஜம்மு காஷ்மீர் முன்னேறி வருகிறது, பயங்கரவாதம் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் முழுவதும் ஒரு புதிய வகையான வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் பணம் மக்களைச் சென்றடைகிறது என்றும் அமித் ஷா கூறினார்.