மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, என்சிபி தலைவர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பூபேந்திர யாதவ் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.