சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகு ஊழியர்கள் 23 பேரை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானை சேர்ந்தவர்கள் மீன்பிடி கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் சகொட்ரா என்ற பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த மீன்பிடி கப்பலுக்குள் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் 9 பேர் நுழைந்தனர். கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்து உதவிகோரி அவரச அழைப்பு கொடுக்கப்பட்டது.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை போர் கப்பல்கள் மீட்பு பணிக்காக விரைந்து சென்றனர். சுமார் 12 மணிநேர தீவிர முயற்சிக்குப்பின் இந்திய கடற்படையிடம் கொள்ளையர்கள் சரணடைந்தனர்.
மீன்பிடி கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானியர்கள் உள்பட அனைத்து மாலுமிகளையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.