ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தது, சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான ஆவணங்களையும் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும், இருவரும் காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இயக்குநர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பி, கடந்த 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, தி.நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களின் வீடு, அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.