முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரியும், அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் இருப்பதாகவும், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தியது நீதிமன்ற காவலில் உள்ளவர்களையும் பாதித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமலாக்க இயக்குநரகம் சேகரித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதி செய்து, குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவதிலும் மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் முடிவு செய்ய முடியாது.அதனை நீதிபதிகள் தான் முடிவு செய்வார்கள்.
முதலமைச்சர் என்பதற்காக தனி சலுகை வழங்க முடியாது. மக்களவை தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனால், தேர்தலை முன்னிட்டு அமலாக்க துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற வாதத்தை ஏற்றுக்கொள் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அப்ரூவரின் வாக்குமூலம் மீது சந்தேகம் எழுப்புவது என்பது, நீதிபதி மற்றும் நீதிமன்றம் மீது பழிசுமத்துவது போலாகி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல எனறும், கெஜ்ரிவால் கைது சட்டவிரோதமல்ல என கூறி ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளார்.