அமெரிக்கா, ரஷ்யா பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் 2024க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை கேங்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 1993ல் எம்எல்ஏ ஆன போது, பிடிஓ (தொகுதி மேம்பாட்டு அதிகாரி) ஒரு பஞ்சாயத்தில் இரு இந்திரா ஆவாஸ் யோஜனா வழங்கியதை நினைவுகூர்ந்தார். ஆனால் இன்று பிரதமர் மோடியின் தலைமையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதேபோல் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களையும் அவர் விவரித்தார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தை அடைந்தது.
எஃகு உற்பத்தியில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பானை தோற்கடித்து 3-வது இடத்தில் உள்ளோம். ‘மேட் இன் இந்தியா’ மூலம் தயாரிக்கப்பட்ட செல்போன்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.
மத்திய அரசுடன் இணைந்து, சிக்கிமில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவோம். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இங்கு அமைக்கப்படும் என்றும் நட்டா தெரிவித்தார்.