டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் கோரி நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.
டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.
இந்த மனு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்காக ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ராகேஷ் சைல் முன் பட்டியலிடப்பட்டது.
அப்போது ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறை வழக்கறிஞர் சைமன் பெஞ்சமின் கோரினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
சமீபத்தில், அமனாத் உல்லா கான் தலைவராக இருந்தபோது டெல்லி வக்பு வாரியத்தில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நான்கு பேர் மற்றும் ஒரு நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.