போருக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
மேலும், வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் அவ்வப்போது, சர்ச்சையான கருத்துக்களை கூறி, பதற்றமான நிலையை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில், போருக்கு தயாராக வேண்டிய நேரம் இது என்று வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார். ராணுவப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட அதிபர், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுவதால், கடந்த காலத்தை காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியிருப்பதாக கூறினார்.
போருக்கு தயாராகும் முன்னேற்பாடாக வட கொரியா பல்வேறு வகையான ஏவுகணைகளை அதிகளவில் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.