கோடை வெயிலை மனிதர்களே சமாளிக்க முடியாத சூழ்நிலையில் வாயில்லா ஜீவன்களாகிய விலங்குகள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றன. அவற்றுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் படாதபாடுபடுத்தி வருகிறது. குறிப்பாக மனிதர்களே வெயிலில் செல்ல அஞ்சும் நிலையில் தெருக்களில் அலையும் நாய், பூனை, குரங்கு ,காகம் ,கிளி குருவி போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு போராடி வருகின்றன.
குரங்கு முதல் கழுகு வரை தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வனப்பகுதிகளில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை பெறும். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதே நேரத்தில், சென்னையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் ( heaven for animals)என்ற இயக்கம் மனித மாண்பை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் வாழும் அனைத்து வாயில்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உணவுகளையும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு உதவிக்கரம் நீட்டி வருகிறது இந்த இயக்கம்.
ஆர்வமுள்ள குழந்தைகள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதி வரை இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை விலங்குகளுக்காக நீட்டி வருகிறார்கள். இந்த இயக்கம் சென்னையில் மட்டும் சுமார் 4000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது. அண்மையில் 2,500 தண்ணீர் தொட்டிகளை விலங்குகளுக்காக வழங்கியது heaven for animals (HFA).
பெரியவர்களே பொறாமைப்படும் வகையில் ஏழு வயது சிறுமி மித்ரா, சிறுவயதிலேயே தெருவோர விலங்குகளுக்கு உணவு வழங்குவதை ஆர்வத்துடன் செய்து வருகிறார்.
கோடைகாலத்தில் விலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகிறார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி பால்ராஜ்.
கோடை வெயில் வாயில்லா ஜீவராசிகளான விலங்குகளுக்கும் சிறு செயல்களின் மூலம் பெரு உதவிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.