கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உணவைத் தேடி யானைகள் வந்தபோது மின்கம்பி உரசியதில் 6 வயது மதிக்கதக்க மேக்னா யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை ஜவளகிரி, ஆய்யுர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவைத் தேடி காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை ஆய்யூர் சாலை சந்தனப்பள்ளி அருகே காட்டு யானைகள் உணவவைத் தேடி வந்த போது சந்தனபள்ளி ஏரி அருகே தாழ்வான இடத்தில் தொங்கிய மின் கம்பி மீது, காட்டு யானை உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இன்று காலை உயிரிழந்த காட்டு யானை உடலைப் பார்த்த சந்தனபள்ளி கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானை மீது தார்பாய் மூடி பாதுகாத்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு உயிரிழந்த யானையை அடக்கம் செய்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.