அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி கசிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக 5 கோடியே 92 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஆலைய மூட உத்தரவிட்ட தமிழக அரசு, ஆலையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தது.
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், ஆலையின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு வழங்கிய 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆலை மீண்டும் இயங்கும் முன்பு தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்றும்,
மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழில்நுட்ப குழவினர் ஆலையை கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.