வங்கதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருக்கு நெருக்கமான நண்பரே கூலிப்படையை வைத்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யார் இந்த அன்வருல் அசீம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? இந்த படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்கள் என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி சார்பாக, ஜெனைடா-4 தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அன்வருல் அசீம். மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த மே 12ம் தேதி இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கடந்த வாரம் கொல்கத்தாவில் காணாமல் போன அன்வருல் அசீம், கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்த பொது தான் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
கொல்கத்தாவில் பாரா நகர் பகுதியில், தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கியிருந்த அன்வருல்அசீமை கொலை செய்ததாக, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக மும்பையில் குடியேறிய ஜிகாத் ஹவால்தார்,அமானுல்லா மற்றும் பைசல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றாலும் , தங்கம் கடத்தல் தொடர்பான பிரச்சனையால் தான் அன்வருல் அசீம் கோழி செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தைச் சேர்ந்த அமெரிக்கக் குடியுரிமை உள்ள அக்தருஸ்ஸாமான் தான் கொலை செய்ய சொன்னார் என்றும், அதற்காக 5 கோடி ரூபாய் கூலி பெற்றதாகவும், பிடிபட்ட குற்றவாளிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கொலையில் தமக்கு சம்பந்தம் இல்லை என்று, அக்தருஸ்ஸாமான் தெரிவித்திருந்தாலும், அவருக்கும் அன்வருல் அசீமுக்கும் உள்ள தொடர்பை அனைவரும் அறிந்துள்ளனர்.
ஜெனைடா-4 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம், ஏற்கெனவே தங்க கடத்தல் விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர். அமெரிக்காவின் இண்டர்போல் அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அசிம் இருந்தார்.
2000ம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை, இவர் மீது மூன்று கொலைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வியாபாரம் செய்தது என 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வங்க தேச தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார் அசீம்.
அன்வருல் அசீம் தனது நண்பரான அக்தருஸ்ஸாமானுடன் சேர்ந்து தங்க வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் இணைந்து செய்யப்பட்டு வந்துள்ளனர். இதற்கு ஏற்ற இடமாக, இந்தியாவின் கொல்கத்தா நகரையும் , நொய்டா நகரையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் அன்வருல் அசீம் பெரும்பணத்தை கமிஷனாக பெற்று வந்த வந்திருக்கிறார். கூடவே தங்க மற்றும் ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு கடத்த இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இந்திய வங்கதேச எல்லையில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத தங்கத்தை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர்.
இந்திய எல்லையில் கடத்தல் தங்கம் பிடிபட்டதில் தான் அன்வருலுக்கும், அக்தருஸ்ஸாமானுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது .
ஸ்ரீலிஸ்டா ரஹ்மான் என்ற பெண் தோழியின் மூலம் அன்வருல் அசீமை கொலை செய்ய முடிவெடுத்து, கூலிப்படையினர் மூலம் இந்த படுகொலையை செய்திருக்கிறார் அக்தருஸ்ஸாமான். இந்த விவரங்கள் எல்லாம் காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், அன்வருல் அசிம் இந்தியாவில் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், “விசாரணை முடிவதற்குள் எதுவும் கூற முடியாது. ஆனாலும் அவாமி லீக்கில் குற்றவாளிகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
அன்வருல் அசீம் கொலையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் அமானுல்லா இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஒ பர்போ பங்களார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவன் என்றும், இரண்டு கொலை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவன் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் அக்தருஸ்ஸாமான் கைதாகும் நேரத்தில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.