பாஜக கூட்டணி 400 தொகுதிகளை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் விடுமுறையை கழிக்க சிம்லா சென்றதாகவும், ஆனால் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க செல்லவில்லை என தெரிவித்தார்.
ஆனால் 23 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி நாட்டுக்காக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் அச்சமூட்டுவதாக தெரிவித்த அமித்ஷா, எந்த அணுகுண்டுக்கும் பாஜகவினர் அஞ்ச மாட்டார்கள் என்றும் கூறினார்.