மதுவிலக்கினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பீகார் மாநிலத்திடமிருந்து தமிழகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பீகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளில் மதுவால் நிகழ்ந்திருக்க வேண்டிய 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது எனவும்,
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை என்றும், மாறாக, மதுவணிகத்தால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு மதுவணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பீகார் மாநிலத்திடமிருந்து கற்றுக்கொண்டு தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.