அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் செயல்பட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடைக் குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நோயாளியிடம் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை நடந்ததாக கூறியதோடு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டார்.