மக்களவைத் தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஜி7 உறுப்பு நாடுகளின் வாக்காளர் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கும், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வாக்காளர்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் 31 கோடியே 20 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளதாக கூறிய தலைமைத் தேர்தல் ஆணையர், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று கை தட்டினார்.
மேலும் தேர்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த தேர்தலைவிட 3 மடங்கு அதிகம் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளால், இந்த முறை 39 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப் பதிவு நடைபெற்றதாகவும், கடந்த 2019 தேர்தலின்போது 540 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வன்முறையற்ற தேர்தலை உறுதிப்படுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.