பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருங்களத்தூர் – செங்கல்பட்டு இடையே 27 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ள 6 வழி பறக்கும் சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கைவிட உள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் ஒரே தீர்வு எனக்கூறியுள்ள அவர், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் திட்ட மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
6 வழி பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதால் கிடைக்கும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களுடன் ஒப்பிடும்போது, அத்திட்டத்திற்கான செலவு என்பது மிகவும் குறைவு எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.